நெல்லையில் கலப்பு திருமணம் செய்த பெண் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனு
நெல்லை சிபிஎம் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண், தனக்கும் தனது கணவருக்கும் பாதுகாப்புக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினியும், பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதன் குமாரும் அண்மையில் நெல்லை சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண் வீட்டார், சிபிஎம் அலுவலகத்தை சூறையாடினர்.
இந்த நிலையில், கலப்புத் திருமணம் செய்த இளம்பெண் உதய தாட்சாயினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்புக் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். தனது கணவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தங்கள் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார்.
நெல்லை வெள்ளாளர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் தன்னை அடைத்து வைத்து துன்புறுத்தியதாகவும் மனுவில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். அங்கிருந்து தப்பித்து நெல்லை சிபிஎம் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக அடைக்கலம் புகுந்ததாகவும், அதனால் அந்த அலுவலகத்தை தனது உறவினர்கள் உடைத்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் உதய தாட்சாயினி குறிப்பிட்டுள்ளார்.
தானும் தனது கணவரும் அமைதியாக வாழ்வதற்கும் எந்த விதமான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருப்பதற்கும் காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க உத்தரவிட மனுவில் கோரி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.