குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டுமா..? அப்ப இது கட்டாயம் - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடிசை இல்லாத நகரங்களை ஏற்படுத்தும் நோக்கில், 1970-ஆம் ஆண்டில் குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அண்மையில் பெயர் மாற்றம் ஏற்பட்டது. புதிய வீடுகளை கட்டிக் கொடுப்பது, மீள் குடியேற்றம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடுகளைப் பெற, ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நலத் திட்டத்தைப் பெறும் பயனாளிகள், ஆதார் எண்ணை வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கும் முன்னதாக, ஆதார் எண்ணைப் பெற வேண்டும் என்றும், இதற்கு, அருகில் உள்ள ஆதார் மையத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது திட்டத்தை செயல்படுத்தும் துறைகள், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை செய்து கொடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் எண்ணைப் பெறும் வரை, வேறு அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.