டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து வாகனங்கள் மீது விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்த விமான நிலைய முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. டெல்லியின் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி வருவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
கனமழையால் டெல்லி விமான நிலைய முதல் முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அங்கு நிறுத்தி வைத்திருந்த சில கார்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.
மேற்கூரை இடிந்து விழுந்ததால் டெல்லி விமான நிலையத்தின் முதல் முனையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று விமான சேவை அல்லது டிக்கெட் பணத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.