"நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்" - விஜய்யின் அதிரடி கருத்தால் அதிர்ந்த அரங்கம்!

tamilaga-vetri-kalagam-leader-vijay-speech-about-neet-exam-in-student-award-function
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 11:34:00

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜயின் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் கட்டமாக மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் பேசிய நடிகர் விஜய், போதை குறித்து பேசி அரங்கத்தை அதிர வைத்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில் பேசிய விஜய், நீட் தேர்வு குறித்து பேசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் நீட் தேர்வு விலக்கு வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய்யும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினார். தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், மத்திய அரசை ஒன்றியம் என குறிப்பிட்டார். மேலும், ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது என்று விமர்சித்தார். வேற்றுமை தான் பலம் என்று கூறிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து நடத்தப்படும் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார். அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேட்டால் அதன் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்து விட்டதாக விஜய் சுட்டிக்காட்டினார்.

நீட் விலக்கு மட்டுமே தீர்வு என்று கூறிய விஜய், நீட்டிற்கு எதிராக தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக தெரிவித்தார். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், உடனடியாக சிறப்பு பொதுப்பட்டியலுக்காவது அதனை கொண்டு வர வேண்டும் என்று கூறினார். வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதாக கூறிய விஜய், மாணவர்கள் அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக படிக்க வேண்டும் என்றும் கடவுள் ஏதேனும் வாய்ப்பை வைத்திருப்பார் என்றும் அறிவுரை வழங்கினார்.

இறுதியாக மாணவர்களுக்கு அட்வைஸ் செய்த விஜய், வெற்றி நிச்சயம் என கூறி, கையெடுத்து கும்பிட்டு நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி விடைபெற்றார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next