சக மாணவிக்கு தாலி கட்டி தலைமறைவான 12ஆம் வகுப்பு மாணவன்.. கரூரில் அதிர்ச்சி!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு சக மாணவன் தாலி கட்டி தலைமறைவான நிலையில், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதான சிறுவனும், சிறுமியும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 27ஆம் தேதி வகுப்பறையில் சிறுமிக்கு சிறுவன் தாலி கட்டியதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் மாணவனை பிடித்து கண்டித்தனர்.
இதையடுத்து அன்று மாலையே சிறுமியும், சிறுவனும் மாயனமான நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் சிறுவனிடம் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் மாணவிக்கு மட்டும் டிசி வழங்கியது போல், இதற்கு உடந்தையாக இருந்த மாணவர்கள் மீதும் அதே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.