50 ஏழை ஜோடிகளுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி தம்பதி

mukesh-ambani-nita-ambani-conducted-mass-wedding-ceremony-for-underprivileged-couples
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 20:19:00

பிரபல இளம் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை ஒட்டி, மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

உலகமே வியக்கும் வகையில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அத்துடன்  ஏழை எளிய மக்களுக்கு விருந்து வைத்தல், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என அம்பானி குடும்பத்தினர் தாராள தன்மையுடன் நடந்து வருகின்றனர்.

அந்த வகையில்  50க்கும் மேற்பட்ட ஏழை ஜோடிகளுக்கு அவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவில், மணமக்கள் குடும்பத்தை சேர்ந்த 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளை நடத்தப் போவதாக முகேஷ் மற்றும் நீடா அம்பானி உறுதி அளித்துள்ளார்கள். இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்களுக்கு மங்கள சூத்திரம், திருமண மோதிரங்கள், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன. இதேபோன்று காலில் அணியும் மோதிரம் போன்ற வெள்ளி ஆபரணங்களும் ரிலையன்ஸ் குழுமம் தரப்பில் அளிக்கப்பட்டது.

மணமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1.01 லட்சம் (ஒரு லட்சத்து ஆயிரம்) சீதனமாகவும், ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு வருடத்திற்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு வகையான 36 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்சி மற்றும் மின்விசிறி, அத்துடன் ஒரு மெத்தை மற்றும் தலையணைகள் உள்ளிட்டவை முகேஷ் அம்பானி குடும்பத்தினரால் பரிசாக வழங்கப்பட்டது.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்டின் திருமணம் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆதரவற்றோருக்கு அம்பானி குடும்பத்தினர் செய்துள்ள இந்த தர்ம காரியம் வரவேற்பை பெற்றுள்ளது.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next