விசாரனை படத்தில் இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா..? பாலு மகேந்திராவுக்காக வெற்றிமாறன் செய்த செயல்..

cinema-vetrimaran-used-balu-mahendras-veedu-movie-house-as-police-station-in-visaranai-movie
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 11:20:00

தமிழ் சினிமா இன்றும் உச்சியில் வைத்து கொண்டாடும் நபர் பாலு மகேந்திரா. மிக சிறந்த இயக்குனர், மிக சிறந்த ஒளிப்பதிவாளர். இவர் மறைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும் கூட, இன்றும் தமிழ் சினிமா மற்றும் தமிழ் சினிமாவின் இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவருமே இவரை கொண்டாடுகிறார்கள். இவரது கேமரா கண்களில் மட்டும் சாதாரண நடிகைகள் கூட கண் இமைக்காமல் பார்க்க தோன்றும் பேரழகியாக காட்டுவாராம். தனது கேமராவில் பலரையும் பிரமிக்க வைத்துள்ளார் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திரா இயக்கிய அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, தலைமுறைகள் மற்றும் பல படங்கள் இன்றும் தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களாக திகழ்ந்து வருகிறது. தமிழ் சினிமாவில் கொண்டப்பட்டவர் இவர், இன்றும் கொண்டாடப்படுபவர். இன்று சினிமாவில் தங்களது வியக்க வைக்கும் படைப்புகளின் மூலம் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் இயக்குனர்கள் வெற்றிமாறன், ராம், பாலா ஆகியோர் பாலு மகேந்திராவிடம் பணிபுரிந்தவர்கள் தான்.

பாலுமகேந்திராவுடன் அசிஸ்டண்டாக பணிபுரிந்த இன்றைய பிரபல இயக்குனர்கள் ராம், வெற்றிமாறன், பாலா, போன்றோரின் படங்களில் நம்மால் பாலுமகேந்திரா கேமரா கண்களின் சாயலை பார்க்க முடியும். இன்றும் எந்த ஒரு நேர்காணலாக இருந்தாலும், எடுத்துக்காட்டாக இருந்தாலும் பாலுமகேந்திராவை பற்றியும் அவரின் படைப்புக்களை பற்றியும் பேசி வருபவர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது குரு பாலு மகேந்திரா நினைவாக அவரை பின்பற்றி தான் செய்த விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். அந்த விஷயம் பலருக்கும் ஆச்சரியத்தையும், பிரம்மிப்பையும் ஏற்படுத்தியது. 1988 ஆம் ஆண்டு வீடு படத்தை இயக்கினார் பாலுமகேந்திரா, அந்த படத்திற்க்காக அவர் வீடு ஒன்றை கட்டி அந்த படத்தின் படப்பிடிப்புக்காக பயன்படுத்தினார். அந்த வீட்டின் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

அப்படி, பாலு மகேந்திரா வீடு படத்திற்காக கட்டிய வீட்டை, பின் முழுமையாக கட்டி முடித்த வெற்றிமாறன், அந்த வீட்டில் விசாரணை படத்தின் ஷூட்டிங்கை எடுத்துள்ளார். வீடு படத்தின் ஷூட்டிங்கிற்கு பிறகு அந்த வீட்டில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் வெற்றிமாறனின் விசாரணை படத்துடையது தான். வீடு படத்தில் வந்த வீடு தான் விசாரணை படத்தின் இரண்டாம் பாதியில் வரும் போலீஸ் ஸ்டேஷன் என்று வெற்றிமாறன் உணர்ச்சிமிக்க கூறியிருந்தார்.

‘அந்த படம் எடுக்கும்போது அவர் உயிரோடு இல்லை, அவர் உயிரோடு இருந்திருந்தால் இதற்கு அவர் எவ்வாறு ரியாக்ட் செய்திருப்பார் என்று பலமுறை நான் நினைத்து பார்த்திருக்கிறேன்’ என்று வெற்றிமாறன் கூறிய அந்த வீடியோ கட்சி தற்போது இணையத்தில் அனைவரின் வியப்பையும் பெற்று வருகிறது.

Trending News
Recent News
Prev
Next