'தற்குறி' ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்த வைகோ
சென்னையில் மதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழ்நாடு முழுக்க இன்று முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதேபோல், அனைத்து கட்சியினரும் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்தனர்.
மதிமுக சார்பில், சென்னை காமராஜர் அரங்கத்தில் அண்ணாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அண்ணா குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் ஏராளமான மதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “முதலமைச்சர், அமெரிக்க பயணத்தின் மூலம் ரூ. 7,000 கோடி மூதலீடுகள் தமிழ்நாடு வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். மூடிவிட்டு சென்ற ஃபோர்டு கம்பெனியை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். திராவிட இயக்கத்தை காப்பதற்கு திராவிட இயக்கமும், திமுகவும் இணைந்து செயல்படுவதை போல் மதிமுகவும் திமுகவுற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.
ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் பேச்சு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். திருமாவளவனின் பேச்சு அவருடைய உரிமை” என தெரிவித்தார்.
மேலும், “தமிழ்நாட்டில் இருப்பதை போன்ற மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை. கவர்னர் பதவி தேவையில்லாதது. தமிழ்நாட்டில் உள்ள கவர்னர் ஆர்.என்.ரவியை போன்று தற்குறியாக யாரும் இருக்க முடியாது. மதுவிலக்கு கொள்கையில், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்றுதான் முதலமைச்சரே தெரிவித்துள்ளார்” என வைகோ தெரிவித்தார்.