மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லும் ராக்கெட்... ரூ.8,239 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு!
சந்திரயான் - 4 மற்றும் வெள்ளி கோளில் ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சந்திரயான் - 3 திட்டத்தில் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி இஸ்ரோ சாதித்த நிலையில், சந்திரயான் - 4 திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிலவில் உள்ள மண் மற்றும் பாறைக் கற்களை பூமிக்கு எடுத்து வரும் வகையில் சந்திரயான் - 4 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2,104 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதேபோல், வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை, அதற்காக 1,236 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனைக்கு 20 ஆயிரத்து 193 கோடி நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், தற்போது இருப்பதைவிட 3 மடங்கு எடையை கொண்டு செல்லும் வகையிலான அடுத்த தலைமுறை ராக்கெட்டுகளை தயாரிக்கும் இஸ்ரோவின் திட்டத்திற்கும் 8,239 கோடி அளித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மீண்டும் பயன்படுத்தும் வகையிலான இந்த ராக்கெட்டுகள், 2040-ஆம் ஆண்டு மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.