IND vs BAN | கருத்து வேறுபாடா..? முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி - கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இணைந்து நடத்திய கலந்துரையாடலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரிலும் பங்கேற்கிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.
இந்திய அணியில் விளையாடிய கவுதம் கம்பீர் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு பிறகு இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுதான். இந்த நிலையில், கவுதம் கம்பீர் உடன் விராட் கோலி நடத்திய கலந்துரையாடலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
விராட் கோலியும், கவுதம் கம்பீரும் இணைந்து பல போட்டிகளில் ஒன்றாக விளையாடியிருந்தாலும், இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. அதற்கு சாட்சியாக பல போட்டிகளில் அவர்கள் இருவரும் ரசிகர்கள் முன்னிலையிலேயே சண்டை போட்டனர். ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தங்கள் பசுமையான நினைவுகளை இருவரும் அசைபோட்டனர்.
கிரிக்கெட் போட்டிகளில் கோலி விளையாடிய சிறப்பான இன்னிங்ஸை கம்பீரும், கம்பீர் விளையாடிய போட்டிகளை கோலியும் சிலாகித்து பேசும் வகையில் 19 நிமிடங்கள் ஓடும் கலந்துரையாடலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. விராட் கோலி, கவுதம் கம்பீர் இருவரின் கலகலப்பான கலந்துரையாடல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.