சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தனியாகக் கழன்று ஓடிய 3 பெட்டிகள் - பயணிகள் அலறல்!
திருச்சியில், சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 3 பெட்டிகள் தனியாகக் கழன்று ஓடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லக்கூடிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி சந்திப்பை புதன்கிழமை அதிகாலை வந்தடைந்தது. ரயிலை நிறுத்தும்போது திடீரென அதன் கடைசி 3 பெட்டிகள் கழன்றன. கழன்ற 3 பெட்டிகளும் சுமார் 50 மீட்டர் தூரம் பின்னோக்கிச் சென்றன. இதனால் பெட்டிகளில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ரயிலை நிறுத்தும்போது இந்தச் சம்பவம் ஏற்பட்டதால் வேகக் குறைவு காரணமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. அங்கு விரைந்த பொறியாளர்கள் உடனடியாக ரயில் பெட்டிகளை இணைத்து, சென்னைக்கு ரயிலை அனுப்பி வைத்தனர்.
பெட்டிகள் கழன்று ரயில் நிறுத்திவைக்கப்பட்டதால் சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ் காலையில் அரை மணி நேரம் தாமதமாகவே வந்தடைந்தது. இந்நிலையில் ரயில் பெட்டிகள் கழன்றதற்கான காரணம் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.