பிரபல மலையாள நடிகை காலமானார்... திரையுலக பிரபலங்கள் இரங்கல்!
மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான கவியூர் பொன்னம்மா (80) வயது மூப்பின் காரணமாக இன்று (20ம் தேதி) காலமானார்.
கேரள மாநிலத்தின் மாநில விருதை நான்கு முறை வென்ற கவியூர் பொன்னம்மா, தனது 12 வயதில் பாடகராக அறிமுகமானவர். பிறகு அதேசமயத்தில் நாடகங்களில் நடிக்க துவங்கினார். நாடகத்தில் நடிக்க துவங்கி சில காலத்திலேயே கேரளம் மக்கள் கலை கழகத்தில் முன்னணி நடிகையாக மாறினார். மேலும், தனது 14 வயதில் முதல் திரைப்படத்தில் நடித்தார். 14 வயதில் துவங்கிய தன்னுடைய திரை வாழ்க்கையில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் சில காலமாக வயது மூப்பின் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது மருத்துவச் சிகிச்சைக்காக கொச்சினில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (20ம் தேதி) காலமானார்.
நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, பிரேம் நசீர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் தாயாக திரைப்படங்களில் நடித்துள்ளார். அம்மா கதாபாத்திரத்தில் நடித்த அவர், அந்த பாத்திரங்களின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர். தன்னுடைய திரைப்பயணத்தில் நான்கு முறை சிறந்த துணை நடிகைக்கான கேரளம் மாநில விருதை பெற்றுள்ளார்.
இவரது மறைவையொட்டி, கேரள மாநிலம் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் சமூகவலைதளப்பக்கத்தில், “பல தசாப்தங்களாக திரையில் தாய்மையின் சாரமாக திகழ்ந்த கவியூர் பொன்னம்மாவின் மறைவுடன் மலையாள சினிமாவில் ஒரு முக்கியமான அத்தியாயம் முடிவடைகிறது.
மலையாளப் பெண்களைப் பற்றிய அவரது சிரமமற்ற சித்தரிப்புகள் எங்கள் கூட்டு நினைவகத்தில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளன. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மலையாள சினிமாவை போற்றும் அனைவருக்கும் இதயப்பூர்வமான இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், மலையாள திரையுலக நடிகர்கள் கவியூர் பொன்னம்மா மறைவிற்கு தங்களின் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.