“சாப்பாடு போட்டு அடிங்க..” திருடனை கட்டிப்போட்டு உணவு கொடுத்த மக்கள்! - ஆந்திராவில் சுவாரஸ்யம்!

telangana-villagers-tie-up-suspected-thief-feed-him-before-calling-cops
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-20 21:25:00

தெலங்கானா மாநிலத்தில் பசிக் கொடுமையால் திருட வந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்களே உணவு ஊட்டி விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் எல்லா ரெட்டி கூடம் கிராமத்தில் மர்மநபர் ஒருவர் அங்குள்ள வீடுகளை நோட்டம் விட்டபடி சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த கோவிலை சுற்றி சுற்றி வந்தவரை அப்பகுதி மக்கள் பார்த்து சந்தேகமடைந்துள்ளனர். அவரைப் பிடித்த பொதுமக்கள் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக உளறியுள்ளார்.

ஊர் மக்கள் சற்று மிரட்டி கேட்டதும் அப்பகுதியில் திருட வந்ததாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். உடனே அவரைப் பிடித்து அங்குள்ள கம்பம் ஒன்றில் கட்டிப்போட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை அடித்து உதைக்க ஆரம்பித்தனர். அப்போது கதறி அழுத அவர் “என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்க.. ஆனால் என்னால் பசி தாங்க முடியவில்லை. சாப்பாடு கொடுத்து விட்டு அடிங்க” என கூறியுள்ளார்.

இவ்வளவு நேரம் வலி தாங்க முடியாமல் அழுகிறார் என நினைத்த பொதுமக்கள், பசி தாங்க முடியாமல் தான் அழுகிறார் எனத் தெரிந்ததும் அவர் மீது பரிதாபமடைந்தனர். அவர் மீது தாக்குதலை நிறுத்திய பொதுமக்கள் ஒரு வீட்டில் இருந்து புளியோதரை கொண்டு வந்தனர். கட்டி வைத்திருந்த திருடனை விடுவிக்காமல் அவர்களே ஊட்டி விட்டனர்.

அதற்குள் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட வந்த இளைஞரை பிடித்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பதும், பசிக்காக அப்பகுதி வீடுகளில் திருட வந்ததும் தெரிய வந்தது.

திருட வந்த இளைஞரை கட்டி வைத்து உணவு ஊட்டி விட்ட இந்த வீடியோ காட்சிகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Trending News
Recent News
Prev
Next