கொடிக்கம்பம் பிரச்சனை; த.வெ.க. - சி.பி.எம். கட்சியினரிடையே மோதல்!
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கட்சிக் கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பெருகடம்பனூர், கீழ்வேளூர், ஓர்குடி உள்ளிட்ட கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே கொடியேற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த கீழ்வேளூர் போலீசார் இரு தரப்னிரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய பின் தவெக கொடியினை வேறு இடத்தில் ஏற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட த.வெ.க. வினர் அருகில் வேறொரு இடத்தை தேர்வு செய்து புதிய கொடிகம்பத்தை நட்டு வைத்தனர்.
இந்நிலையில் தவெக நிர்வாகி மாரிமுத்து மற்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் இளங்கோ, துரை ஆகியோரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தள்ளது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கியதில் மாரிமுத்து தலையில் பலத்த காயமடைந்தார். அதேபோன்று த.வெ.க.வினர் தாக்கியதில் இளங்கோ மற்றும் துறை இருவரும் காயங்களுடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ராஜாவுடைய இருசக்கர வாகனம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தவெக மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.