‘நான் ஒரு இந்து...’ பொதுத்தேர்தலுக்கு முன் கோயிலில் சாமி தரிசனம் செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!
இங்கிலாந்து தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் இந்து கோயிலில் வழிபாடு நடத்தினார்.
650 தொகுதிகள் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய பிரதமரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் ஆட்சியை இழக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் பிரதமர் ரிஷிக் சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் ஜூன் 29 அன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் தலைவருமான கீர் ஸ்டார்மர் லண்டனில் உள்ள இந்து கோயிலுக்குச் சென்று நேற்று முன்தினம் பூஜை செய்த நிலையில், அதனை தொடர்ந்து ரிஷி சுனக்கும் கோயிலுக்குச் சென்றார்.
ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். பிரபல தொழிலதிபர் நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தியின் மகள்தான் அக்ஷதா மூர்த்தி. கடந்தாண்டு ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தபோது டெல்லியில் உள்ள கோயிலுக்கு இந்த தம்பதி சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் உள்ள கோயிலுக்குச் சென்றிருந்த ரிஷி சுனக் பேசியதாவது, ‘நான் ஒரு இந்து என்பதில் பெருமை கொள்கிறேன். என் மத நம்பிக்கையில் உறுதியாக உள்ளேன். எனது நம்பிக்கையிலிருந்து உத்வேகத்தையும் ஆறுதலையும் பெறுகிறேன். பொதுச் சேவைக்கான எனது அணுகுமுறையில் தர்மம்தான் எனக்கு வழிகாட்டுகிறது’ எனவும் ரிஷி சுனக் கூறினார்.