பிரிட்டன் தேர்தல் 2024 : ஆட்சியை பிடிக்கும் தொழிலாளர் கட்சி... பிரதமராகும் கெர் ஸ்டார்மர்!
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 326 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. நேற்று காலை தொடங்கி நாடு முழுவதும் 40,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தலில் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், இடதுசாரியான தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 91 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தற்போதைய நிலவரப்படி 368 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி 51 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மொத்தமுள்ள 650 உறுப்பினர்களில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால், பிரிட்டனின் புதிய பிரதமராக அக்கட்சியை சேர்ந்த Keir Starmer தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.