மோடி - டிரம்ப் சந்திப்பு... அமெரிக்க தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா?
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அதேபோல், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக களமிறங்குகிறார்.
முதலில் ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் ஜோ பைடன் பெயர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என இருந்த நிலையில், அவர் டிரம்ப் உடனான விவாதத்தில் பின் தங்கியது, உடல் நிலை பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் அவருக்கு பதில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். முன்னதாக டிரம்ப்பிற்கு ஆதரவு பெருகி இருந்த நிலையில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவித்த பிறகு இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இதற்கிடையில் டொனால்ட் டிரம்ப் மீது இரு முறை கொலை முயற்சியும் நடந்து அமெரிக்க தேர்தலை இன்னும் அனல் பறக்க வைத்துள்ளது. அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் பங்கேற்று விவாதித்தனர். இந்த விவாதத்திலும் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தான் சந்திக்க இருப்பதாக பிரச்சார கூட்டம் ஒன்றில் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வரும் 21ம் தேதி பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்காவிற்கு செல்ல இருக்கிறார். அங்கு குவாட் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக செல்லும் பிரதமர் மோடியை, சந்திக்க இருப்பதாக மிக்சிகன் பகுதியில் நடந்த பிரச்சார கூடத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஆதரவு குறைந்துவரும் நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் இந்தச் சந்திப்பை அவர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.