செல்போன் நம்பரை போர்ட் செய்ய புது ரூல் - ஜூலை 1 முதல் அமல்!
செல்போன் நம்பரை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு புதிய விதிகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளன.
இன்று செல்போன் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லிவிடலாம். அவர்களுக்கு வழங்கப்படும் செல்போன் நம்பர்கள் அனைத்தும் ஆதார் கார்டு அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில், ஜூலை 1 முதல் சிம் கார்டு தொடர்பான விதிமுறைகளில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது.
உங்களுடைய சிம் கார்டு தொலைந்து போனாலோ அல்லது வேறு சில காரணங்களுக்காக புதிய சிம் கார்டை மாற்றினாலோ நீங்கள் இனி உடனடியாக வேறு நெட்வொர்க்கிற்கு மாற முடியாது. அதற்கு குறிப்பிட்ட காலம் காத்திருருக்க வேண்டும். அதாவது, தற்போது பயன்படுத்தி வரும் செல்போன் நம்பரை ஒரு நிறுவனத்திடம் இன்னொரு சேவை வழங்கும் நிறுவனத்திற்கு போர்ட் செய்ய UPC எண் உடனடியாக ஒதுக்கப்படும். அதை மாற்ற விரும்பும் நெட்வொர்க் நிறுவனத்திடம் கொடுத்து, அதே நம்பரில் புதிய சிம் கார்டை வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால், தற்போது ஆன்லைன் மோசடிகள் பெரும்பாலும் செல்போன் எண் மூலமே நடைபெறுவதால், உடனடியாக ஒரு செல்போன் நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு குறைந்த பட்சம் 10 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்றும், அதனால் கோரிக்கை வந்தவுடன் உடனடியாக UPC எண் ஒதுக்கப்படக் கூடாது என்றும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு சில செல்போன் சேவை நிறுவனங்கள் ஒப்புக் கொண்டாலும், 10 நாட்கள் காத்திருப்பு காலம் மிகவும் அதிகம் என்று சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே 7 நாட்களாக குறைக்கலாம் என அறிவுறுத்தியுள்ளன. அதிலும் சில நிறுவனங்கள் 2 முதல் 4 நாட்கள் போன்ற குறுகிய காத்திருப்பு காலமே நியாயமானதாக இருக்கும் என்றும், 10 நாட்கள் காத்திருப்பு காலத்தால் சந்தாதாரர்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளன.
இருப்பினும், மோசடியான சிம் இடமாற்றம், நேர்மையற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவே, இந்த புதிய விதிமுறைகளின் நோக்கம் என்று டிராய் தெரிவித்துள்ளது.