விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் - பிரதமர் மோடி
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் செயல்பாட்டுக்கு வந்த இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, காலை 11.33 மணிக்கு விழிஞ்ஞம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும். பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் நான் இந்த துறைமுகத்தை தொடங்குகிறேன். அவர்களின் இழப்பு, தேச விரோத மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளிடமிருந்து நமது நாட்டைப் பாதுகாப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
நீங்கள் இந்தியா கூட்டணியின் முக்கியமான தூண் - மேடையில் பினராயி விஜயனிடம் கூறிய பிரதமர் மோடி. காங்கிரஸ் எம்.பி. சஷி தரூரும் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார். இந்தக் காட்சி பலரின் தூக்கத்தை கலைக்கக் கூடியது. கம்யூனிஸ்ட் அரசு, தனியார் பங்களிப்பை உள்ளடக்கிய திட்டத்தை அங்கீகரித்துள்ளது. முன்னர் வெளிநாடுகளில் செலவிடப்பட்ட நிதிகள் இப்போது உள்நாட்டு வளர்ச்சிக்குச் செலவிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்-மந்திரி பினராயி விஜயன், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழிஞ்ஞம் துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த துறைமுகம், சர்வதேச வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.