பாகிஸ்தானின் பிடியில் உள்ள இந்திய வீரரை மீட்பதில் தொடரும் சிக்கல்
புதுடெல்லி,
இந்தியா-பாகிஸ்தான் இடையே பஞ்சாப் எல்லை பகுதியில் கடந்த 24-ம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங், தவறுதலாக எல்லையை கடந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றார். அவர் நிழலில் ஒதுங்குவதற்காக விவசாயிகளுடன் சென்றபோது எல்லையை தாண்டி விட்டார். அவரை பாகிஸ்தான் படையினர் பிடித்துச் சென்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது முதல்முறை அல்ல என்றாலும், கடந்த 22-ம் தேதி பிற்பகல் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், இந்தியா -பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்தவரான இந்திய பாதுகாப்புப் படை வீரர் பி.கே. சிங்கிடம் இருந்து ரைபில்கள், தோட்டாக்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில், பஞ்சாப் சர்வதேச எல்லையில் தவறுதலாக தாண்டிச் சென்று பாகிஸ்தானின் பிடியில் உள்ள இந்திய பாதுகாப்பு படை வீரரை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. பி.கே.சிங்கை விடுவிக்க இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எல்லைப் பாதுகாப்பில் உள்ள வீரர்கள் கூடுதல் கவனத்தில் இருக்க தலைமை உத்தரவிட்டுள்ளது. இப்பகுதியில், இரு நாட்டு வீரர்களும் தவறுதலாக எல்லை தாண்டுவது வழக்கமானது என்றாலும், ஒரு கொடிக் கூட்டத்திலேயே (Flag Meeting) அவர்கள் திரும்ப அனுப்பப்படுவார்கள். பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா எடுத்துள்ள கடும் நடவடிக்கைகளால் தற்போது பாகிஸ்தான் கொடிக் கூட்டத்திற்கு வர மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.