செம்பனார்கோவில்: வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆறுபாதி ஊராட்சியில் உள்ள விளநகரில் பெருந்தேவித் தாயார் உடனாகிய வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த முடிவு செய்து, திருப்பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்ததை நிலையில் நேற்று முன்தினம் (28-ம் தேதி) கும்பாபிஷேக பணிகள் தொடங்கின.
அன்றைய தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று 5-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 9.45 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்திய முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. பின்னர் பட்டாச்சாரியார் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர்.
இதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.