சென்னை ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்வதா? - உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு!
சென்னை ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தின் குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிண்டியில் 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகை பாக்கி சுமார் 731 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு செப்டம்பர் 6-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது வழக்கு நீதிபதி டீக்கா ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நிலத்தை ஒப்படைக்க 24ம் தேதி கடைசி நாள் என்பதால், பதில் மனு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உரிமையியல் வழக்கை உடனடியாக விசாரிக்ககோரும் மனுவுக்கு செப்டம்பர் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.