17 வயதில் நடந்த சோகம்... விளையாடிக் கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்த பேட்மின்டன் வீரர் உயிரிழப்பு
17 வயதான பேட்மின்டன் வீரர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தோனேசியாவில் சர்வதேச பேட்மின்டன் போட்டித் தொடரின்போது ஞாயிறு அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. பேட்மின்டன் போட்டிகளில் சீன வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில் இந்தோனேசியாவின் யோக்யாகர்த்தா நகரில் சர்வதேச போட்டி கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியின் போது சீனாவின் 17 வயதான ஜாங் ஜிஜீ ஜப்பானின் கசுமா கவானோவை எதிர்கொண்டு விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஸ்கோர் 11-11 என இருந்தபோது திடீரென சீன வீரர் ஜாங் ஜிஜி சுருண்டு விழுந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் உடனடியாக வரவழைக்கப்பட்டு மருத்துவனைக்கு கொண்டு சீன வீரர் கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. மிகவும் திறமை மிக்க வீரராக ஜாங் ஜிஜி இருந்ததாகவும், நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டியவர் இளம் வயதில் உயிரிழந்தது வருத்தமும் அதிர்ச்சியும் அளிப்பதாக சீன விளையாட்டு அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
மறைந்த வீரர் ஜாங் ஜிஜிக்கு மரியாதை செலுத்தும் வகையில், மவுன அஞ்சலியை பல்வேறு நாடுகளில் விளையாடும் பேட்மின்டன் வீரர் – வீராங்கனைகள் செலுத்தியுள்ளனர்.