கள்ளழகருக்காக காவல் பணி செய்யும் பாளையக்காரர்கள்

palayakkarars-doing-security-work-for-kallazhagar
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2025-05-29 21:41:00

மதுரை சித்திரை திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது. திருவிழா நாட்களில் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி-சுந்தரேஸ்வரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவார்கள். விழாவின் முக்கிய நிகழ்வாக, 12-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி பக்தர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்த உள்ளார்.

மதுரையில் சித்திரை திருவிழா கொண்டாட்டம் ஆரம்பமாகி உள்ள இந்த நன்னாளில், கள்ளழகருக்காக காவல் பணி செய்யும் பாளையக்காரர்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

சித்திரை திருவிழாவுக்காக கள்ளழகர் மதுரைக்கு புறப்படும்போது அவரின் பாதுகாவலர்களாக வெள்ளியங்குன்றம் பாளையக்காரர்கள் (ஜமீன்தார் எனவும் அழைப்பார்கள்) உடன் வருகின்றனர். தற்போதைய முக்கிய பிரமுகர்களின் மெய்க்காப்பாளர்களை போல செயல்படுபவர்கள் என்றும் கூறலாம்.

கள்ளழகர் அணிந்திருக்கும் விலை மதிப்புமிக்க ஆபரணங்களை பாதுகாப்பது பாளையக்காரர்களின் பணி. கள்ளழகர் தல்லாகுளம், வைகை ஆறு, வண்டியூர் போன்ற பகுதிகளுக்கு வந்து மீண்டும் மலைக்கு திரும்பும் வரை பாதுகாவல் பணியில் ஈடுபடுகின்றனர்.

அவர்களுக்கு ஆங்காங்கே மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாவல் பணியில் ஈடுபடுவதற்காக அவர்களுக்கு முற்காலத்தில் மூன்று வராகன் தங்கம் வழங்கப்பட்டதாம். காலப்போக்கில் இந்த நடைமுறை மாறி, தற்போது கள்ளழகர் எழுந்தருளும் ஒவ்வொரு மண்டபதாரர்களும் செலுத்தும் கட்டணத்தொகையில் குறிப்பிட்ட பணம் இவர்களுக்கு வழங்கப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next