ADMK 53 | 'அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க மாட்டோம்' - ஈபிஎஸ் கருத்துக்கு சசிகலா சொன்ன பதில்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க மாட்டோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 53-ஆவது ஆண்டு விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு, எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி கொடியேற்றிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக “ரெண்டாப் போச்சு” என இனி கூற வேண்டாம் என்றார்.
இதனிடையே சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக நிறைவேற்றி இருந்தால், தற்போது சென்னையில் தண்ணீர் தேங்கி இருக்காது என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழைநீர் வடிகால் தொடர்பாக திருப்புகழ் குழுவின் பரிந்துரையை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதில் அரசுக்கு என்ன தயக்கம்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக நிறைவேற்றி இருந்தால், தற்போது சென்னையில் தண்ணீர் தேங்கி இருக்காது என்றார். எதிர்க்கட்சி வெள்ளை அறிக்கை கேட்டால், அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் ஈபிஎஸ் தெரிவித்தார்.
இதனிடையே, அதிமுகவில் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அதிமுக சரியாக இல்லை எனவும், அதை சரிசெய்து 2026-ஆம் ஆண்டு ஆட்சியை பிடிப்போம் எனவும் சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுகவில் மாற்றம் நடக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.