கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நள்ளிரவில் நடந்த தடியடி... போலீஸ் திடீர் நடவடிக்கை ஏன்?
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவில் உறங்கிக் கொண்டிருந்த நபர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தின் உள்ளே இரவு தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் உறங்கி விட்டு காலையில் அங்கிருந்து கிளம்பி பணிக்குச் சென்று மீண்டும் இரவில் வந்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் உறங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள், பொதுமக்கள் மீது காவல்துறையினர் திடீரென தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டினர்.
இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பேருந்து நிலைய முகப்பு வாசலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக பேருந்து நிலையத்திற்கு உள்ளே மாநகரப் பேருந்துகள் செல்ல முடியாமல் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் பேருந்து நிலையத்தின் உள்ளே தூங்க அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.