செங்கல்பட்டில் பள்ளி முடிந்து வெளியே வந்த சிறுவன், சிறுமி காரில் கடத்தல்
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அருகே உள்ள ஓழலூரில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகிறனர். இந்த நிலையில் இன்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த மாணவி மற்றும் மாணவர் என இரண்டு பேர் காரில் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலன் என்பவரது மகன் மற்றும் மகளை காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட 2 பேரை மீட்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒழலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேலன் (31) இவருக்கு ஆர்த்தி (30) என்கிற மனைவியும் ரக்சதா (11) என்கிற மகளும் வயது, நித்தின் (7) என்கிற மகனும் உள்ளனர். கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு வேலன் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் குடும்ப பிரச்சினையின் காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறனர்.
செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் காரில் கடத்தப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.