“சமஸ்கிருதத்திற்கு மதிப்பளித்து அன்றாட வாழ்வில் இணைத்துக் கொள்ள வேண்டும்” - பிரதமர் மோடி வலியுறுத்தல்!
‘சமஸ்கிருதத்திற்கு மதிப்பளித்து அன்றாட வாழ்வில் இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு பின்னர் 111 ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, “இன்று ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று தான் ஆகாசவாணியின் முதல் சமஸ்கிருத செய்தியறிக்கை, 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஒலிபரப்பானது. 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தச் செய்தியறிக்கையானது பலரை சம்ஸ்கிருதத்தோடு இணைத்து வைத்திருக்கிறது. நான் ஆல் இண்டியா ரேடியோ குடும்பத்தாருக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, பண்டைய ஞானம் மற்றும் விஞ்ஞானத்தில் சமஸ்கிருதத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. இன்றைய காலத்தின் தேவை என்னவென்றால், நாம் சம்ஸ்கிருதத்துக்கு மதிப்பளிப்பதோடு, நமது அன்றாட வாழ்க்கையிலும் இதை இணைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது இப்படிப்பட்ட ஒரு முயற்சி பெங்களூரூவில் பலர் செய்து வருகிறார்கள். பெங்களூரூவின் ஒரு பூங்காவான கப்பன் பூங்காவில் இங்கிருப்போர் ஒரு புதிய பாரம்பரியத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கே வாரத்தில் ஒரு முறை, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும், குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர் என அனைவரும் பரஸ்பரம் சம்ஸ்கிருதத்தில் உரையாடுகிறார்கள்.
இது மட்டுமல்ல, இங்கே வாதவிவாதங்களின் பல அமர்வுகளும் சம்ஸ்கிருதத்திலேயே ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவர்களுடைய இந்த முயற்சியின் பெயர் சமஸ்கிருத வார இறுதி. இதன் தொடக்கத்தை ஒரு இணையத்தளத்தின் வாயிலாக, அவர்கள் செய்தார்கள். சில நாட்கள் முன்பாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி பெங்களூரூவாசிகளின் மத்தியிலே, சில நாட்களிலேயே மிகவும் பிரபலமானதாகிவிட்டது.
நாம் அனைவரும் இதைப் போன்ற முயற்சிகளில் இணைந்தோம் என்றால், உலகின் இத்தனை தொன்மையான, அறிவியல் செறிவுடைய மொழியின் வாயிலாகப் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் இந்தப் பதிப்பில் உங்களோடு இணைந்து பயணிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. இப்போது முதல் இந்தத் தொடர் எப்போதும் போலவே தொடரும். அடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு புனிதமான ரத யாத்திரை தொடங்கவிருக்கிறது. மஹாபிரபு ஜகன்னாதரின் கிருபையானது நாட்டுமக்கள் அனைவரின் மீதும் பொழிய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
அமர்நாத் யாத்திரையும் தொடங்கி விட்டது, அடுத்த சில நாட்களில் பண்டர்பூர் வாரியும் தொடங்கிவிடும். இந்தப் புனித யாத்திரைகளில் பங்குபெறும் அனைத்து பக்தர்களுக்கும் நான் என் நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன். என்று கூறியுள்ளார்.