ஜம்மு காஷ்மீரின் முதல்வராக பதவியேற்ற பின் உமர் அப்துல்லா சொன்ன அந்த வார்த்தை! - என்ன தெரியுமா?

jammu-kashmir-cm-omar-abdullah-spoke-about-union-territory
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-16 15:35:00

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019-ம் ஆண்டு அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்து ஆகியவை அடுத்தடுத்து நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்று, இந்த மாதம் துவக்கத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநில கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவில் இந்தக் கூட்டணி மொத்தம் 55 இடங்களை வென்றன. இதில், காங்கிரஸ் 6 இடங்களில் வென்றிருந்த நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளனர். இதன் மூலம், அந்தக் கட்சி யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைத்துள்ளது. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், ஆட்சிக்கு நேரடியாக ஆதரவு தரமால், வெளியில் இருந்து தனது ஆதரவை தந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக உமர் அப்துல்லா முடிவு செய்யப்பட்டு, இன்று (16-ம் தேதி) அவர் பதவி ஏற்றார். இவருக்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

உமர் அப்துல்லா பதவி ஏற்பு விழாவில் இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி தலைவர்கள் பிரகாஷ் காரத் மற்றும் டி. ராஜா, திமுகவின் கனிமொழி மற்றும் என்சிபி-யின் சுப்ரியா சூலே ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பிடிபி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தியும் கலந்து கொண்டார்.

பதவி ஏற்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் உமர் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதல்வராக நான் பதவியேற்றிருக்கிறேன். முன்னர் பணியாற்றியதைப் போலவே மகிழ்ச்சியாக பணியாற்றுவேன். இந்த யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்து தற்காலிகமானதுதான் என்று நம்புகிறேன்.

மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இந்திய அரசாங்காத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம். அதற்கான சிறந்த வழி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதன் மூலம் தொடங்கும்” என்று தெரிவித்தார்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next