Chennai Rain : கிண்டி 5 பர்லாங் சாலையில் ஒரே நாளில் வடிந்த மழைநீர்.. எப்படி தெரியுமா?
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்திருந்தது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் நேற்று (15.10.2024) அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கிண்டி 5 பர்லாங் சாலையில் வழக்கம்போல் மழைநீர் தேங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிண்டி 5 பர்லாங் சாலையில் மழை நீர் ஒரே நாளில் வடிந்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது இதை அரசாங்கம் கையகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் அங்குள்ள இரண்டு குளங்களை மாநகராட்சி தூர்வாரியது. மேலும் 4 குளங்கள் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டு, இரண்டு குளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழைநீர் விரைந்து வடிய காரணம்:
இதற்கிடையே, ஒவ்வொரு ஆண்டும் ரேஸ் கிளப் அருகே உள்ள 5 பர்லாங் சாலையில் மழை நீர் தேங்கி பாதிப்பது ஏற்படுவது வழக்கம். இதற்கு ரேஸ் கிளப்பில் இருந்து வரக்கூடிய மழைநீர் முக்கிய காரணமாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டு உள்ளிருந்த குளங்களை தூர்வாரியதும், அதேபோல் அங்கிருந்து வரக்கூடிய மழை நீரை வெளியேற்ற 5 பர்லாங் சாலை மற்றும் வேளச்சேரி சாலை ஆகியவற்றில் மழைநீர் வடிகால் இணைப்புகளை ஏற்படுத்தியதும் ஒரே நாளில் மழைநீர் வடிய முக்கிய காரணமாக கூறப்படுகிறது.