சென்னைக்கு 280 கி.மீ. தொலைவில்... காற்றழுத்த தாழ்வு மண்டலம்

280-km-from-chennai-low-pressure-zone
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-10-16 15:24:00

சென்னை,

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக அது சென்னை- தெற்கு ஆந்திரா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக சென்னைக்கு கனமழை ஆபத்து நீங்கியுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடக்கும் போது அதிகனமழைபெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னைக்கு 280 கி.மீ கிழக்கு- தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 320 கி.மீ. கிழக்கு - வடக்கிலும் மையம் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நாளை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், காற்றின் வேகமாறுபாடு காரணமாக தெற்கு ஆந்திரா நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்துள்ளது. அதனால், சென்னையில் அதிகனமழை மற்றும் கனமழை பெய்யும் வாய்ப்பு குறைந்து, ஆபத்தும் நீங்கியுள்ளது. அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தமும் மற்றும் வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தமும் இணைந்து அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை பரவியிருந்தது.

தற்போது அரபி கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தம் தனியாக பிரிந்து மேற்கு நோக்கி மராட்டியம், கோவா நோக்கி சென்றுவிட்டது. அதன் காரணமாக சென்னைக்கு கனமழை ஆபத்து நீங்கி உள்ளது. இருப்பினும் அடுத்து வரக்கூடிய 2 நாட்களுக்கு சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next