சிங்கப்பூரில் சர்வதேச அளவில் திருவள்ளுவர் கலாச்சார மையம் - பிரதமர் மோடி அறிவிப்பு...
சர்வதேச அளவில் திருவள்ளுவர் கலாச்சார மையம் முதல்முறையாக சிங்கப்பூரில் அமைய உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஜெய்சங்கர், விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப பகிர்வு, சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சி, செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, உலகின் முதல் திருவள்ளுவர் கலாச்சார மையம் சிங்கப்பூரில் அமையும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். சர்வதேச அளவில் திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் AEM Holding நிறுவனத்திற்கு சென்ற பிரதமர் மோடி செமி கன்டக்டர் ஆலையை பார்வையிட்டார்.