கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை.. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு
வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் கடும் மழை பெய்துள்ளது. இதில் அந்த நாட்டின் சில மாகணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாகாங் மாகாணம் கடுமையான பாதிப்பை சந்தித்தாக சொல்லப்படுகிறது. கடும் மழையின் காரணமாக வடகொரியாவின் சாகாங் மாணத்தில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அதேபோல், நிலச்சரிவுகளும் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பேரிடரில் அந்த மாகாணத்தில் 4000 வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும், 15,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்ததாகவும் சொல்லப்படுகிறது. பல ஆயிரக் கணக்கானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்த பேரிடரில் சிக்கியதில் 1000 நபர்கள் வரை உயிரிழந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
வடகொரியாவில் கடுமையான கட்டுபாடுகள் உள்ள காரணத்தினால், அதன் அண்டை நாடான தென்கொரியாவில் இருந்து வரும் செய்திகளே இதனை தெரிவித்து வருகிறது. வெள்ளம் பாதிப்பு, மக்கள் அவதி, மரணங்கள் இவையெல்லாம் ஒருபுறம் இருக்கும்போது, மறுபுறம் வெள்ளத்தடுப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் பல அரசு அதிகாரிகள் ஊழல் மற்றும் கடமைகளை முறையாக செய்யாததன் விளைவே இந்த உயிரிழப்புகளுக்கும் மக்கள் அவதிக்கும் காரணம். எனவே அந்த அரசு அதிகாரிகளுக்கு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மரண தண்டனை விதித்ததாகவும், அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதன்படி, கடமையை முறையாக செய்யவில்லை, ஊழல் குற்றச்சாட்டு என இந்த விவகாரத்தில் 20 முதல் 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், வடகொரியாவின் ‘வட கொரிய மத்திய செய்தி நிறுவனம்’ (KCNA) ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து அதிகாரிகளை கண்டிப்பாக தண்டிக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும், கொரியா டைம்ஸ் எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பாக வடகொரியாவில் ஒரு வருடத்திற்கு 10 மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், ஆனால், கொரோனாவிற்கு பிறகு வருடத்திற்கு 100 மரண தண்டனைகள் விதிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.